‘நடிகர் சங்கத்துக்கான நிதியை மக்கள் கிட்ட வசூலிக்கக் கூடாது!’
‘நடிகர் சங்கத்துக்கான நிதியை மக்கள் கிட்ட வசூலிக்கக் கூடாது!’- யார் சொன்னது தெரியுமா?
நடிகர் சங்கத்துக்கான கடனை அடைக்க முன்பு சிங்கப்பூரில் ஒரு கலை நிகழ்ச்சி நடத்தினார்களே நினைவிருக்கிறதா? ரஜினி, கமல் உள்ளிட்ட அத்தனை கலைஞர்களும் பங்கேற்ற அந்த கலை நிகழ்ச்சியில் ஒரு நடிகர் மட்டும் பங்கேற்கவில்லை. அவர் அஜீத் குமார்.
அன்றைய நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் எவ்வளவோ முயன்றும்கூட அஜீத் வர மறுத்துவிட்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு அவரை தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தபோது, ஒரு நாள் அஜீத்தே நடிகர் சங்க அலுவலகத்துக்கு வந்தார். நேராக விஜயகாந்தைப் பார்த்து, ‘நடிகர் சங்கத்தின் கடனை அடைக்க ஏன் மக்களிடம் வசூலிக்க வேண்டும்? நாடு விட்டு நாடு போய் அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறார்கள். அவர்களிடம் போய் நாம் பணம் கேட்கக் கூடாது. அதைவிட நடிகர்களாகிய நாமே அந்தக் கடனை அடைத்துவிடலாம். இதோ என் பங்களிப்பு ரூ 10 லட்சம். அதற்கான செக்கை இப்போதே தருகிறேன்.
இதேபோல மற்ற நடிகர் நடிகைகளிடம் அவரவர் சக்திக்கு தகுந்தபடி வசூலிக்கலாம். கடனை அடைக்க தேவையான நிதி தானாகக் கிடைத்துவிடப் போகிறது,” என்று கூறி, செக்கைக் கொடுத்துவிட்டுப் போனாராம். இதை விஜயகாந்த் ஏற்கவில்லை. அந்த செக்கையும் பயன்படுத்தவில்லை. திட்டமிட்டபடி கலைநிகழ்ச்சி நடத்தி, சிங்கப்பூர்வாசிகளிடம் நல்ல வசூலும் பார்த்தார்கள்.
இப்போது நட்சத்திர கிரிக்கெட் நடத்தி, தமிழகம் முழுக்க வசூல் வேட்டை நடத்த நடிகர் சங்கம் தயாராகி வரும் சூழலில், இந்த ப்ளாஷ்பேக்தான் நினைவுக்கு வருகிறது!
Source : www.oneindia.com